புதிய செயலியை அறிமுகம் செய்த தேசிய பங்குச்சந்தை! NSEIndia ஆப் இனி உங்கள் ஸ்மார்ட்போன்களில்
NSE எனும் தேசிய பங்குச்சந்தை அமைப்பானது பயனர்களுக்கு எதுவாக NSEIndia எனும் புதிய மொபைல் செயலியை நவம்பர் 1 முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: November 4, 2024
SEBI கட்டுப்பாட்டின் கீழ் இந்திய வர்த்தக நிறுவனங்களை பங்குச்சந்தை மூலம் ஒழுங்குபடுத்தும் அமைப்புகளில் தேசிய பங்கு சந்தையானது (NSE - National Stock Exchange) முதன்மையாக உள்ளது. இதற்கு அடுத்து BSE எனும் மும்பை பங்குச்சந்தை உள்ளது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இந்த இரண்டு அமைப்புகளில் தான் தங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.
NSE, BSE பங்குசந்தை நிலவரம் பற்றி அறிந்து கொள்ள அதற்குரிய இணையதளம் வாயிலாகவோ, அல்லது Zerodha, Upstox, Groww போன்ற தனியார் இடைத்தரகு வர்த்தக நிறுவனங்களின் வாயிலாக அந்நிறுவனங்களின் மொபைல் செயலி வழியாகவும் பங்குச்சந்தை நிலவரத்தை அறிந்துகொள்ளலாம்.
இப்படியான சூழலில், NSE பங்குச்சந்தை நிலவரத்தை அறிந்துகொள்ள அந்த அமைப்பு தங்களுக்கென தனி மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியானது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் செயல்படும் வண்ணம் உருவாக்கப்பட்டு நவம்பர் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. கூகுள் அல்லது ஆப்பிள் ஸ்டோரில் NSEIndia எனும் பெயரில் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இச்செயலியானது, பிரதான மொழியாக ஆங்கிலத்தை கொண்டு செயல்பட்டாலும், தமிழ், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி மற்றும் குஜராத்தி ஆகிய 11 பிராந்திய மொழிகளிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி வெளியீடப்பட்டதன் மூலம் நாடு முழுவதும் உள்ள NSE முதலீட்டாளர்கள், தங்கள் நிதிச் சூழலை ஆய்வு செய்து முதலீடு செய்வதற்கு எதுவாக இருக்கும் என NSE தரப்பில் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள முதலீட்டாளர்களுக்கு NSE-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் பற்றி அதிகளவு அறிந்துகொள்ள தேவையான உள்ளடக்கத்தை இந்த செயலி வழங்கும் எனவும் NSE நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த செயலியில், பங்கு சந்தை குறியீடுகள் (ஏற்ற - இறக்கங்கள்), சந்தை மதிப்பீடு, சந்தையின் போக்கு, நிஃப்டி 50-ல் (டாப் 50 நிறுவனங்கள்) லாபம் ஈட்டியவர்கள், நஷ்டமடைந்தவர்கள் , நிறுவனங்களின் பங்கு விலை, குறிப்பிட்ட பங்குகளுக்கான தேடல், தனி கண்காணிப்பு பட்டியல்கள் என பல்வேறு உள்ளடக்கங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
NSE-ன் தலைமை வணிக மேம்பாட்டு அதிகாரி ஸ்ரீராம் கிருஷ்ணன் இந்த செயலி பற்றி கூறுகையில்," NSE செயலி வெளியீடு என்பது NSE செயல்பாட்டில் ஒரு மைல்கல்" என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், “எங்கள் புதிய மொபைல் செயலி மற்றும் எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை 11 பிராந்திய மொழிகளில் விரிவுபடுத்தியுள்ளோம். அதில், எளிதில் அணுகக்கூடிய அளவில் நிதிச் சூழலை கண்காணிக்கும் பல்வேறு உள்ளடக்கங்களை அதில் அறிமுகம் செய்துள்ளோம்.
இந்த முயற்சிகள் முதலீட்டாளர்களுக்கு சந்தை தகவல்களை அவர்களின் தாய்மொழியில் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து NSE முதலீட்டாளர்களும் NSE நிறுவனங்களின் பின்னணியை அறிந்து இந்தியாவின் பொருளாதாரப் பயணத்தில் நம்பிக்கையுடன் பங்கேற்க முடியும் என்பதை NSEIndia உறுதிசெய்கிறது. இதன் மூலம், ஒவ்வொரு தனிநபருக்கும் பங்குச் சந்தைகளை எளிதாக கொண்டு செல்வதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்." என்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் கூறினார்.
No comments yet.