தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Saturday, Apr 19, 2025 | India

Home / நிதி

குழந்தைகளுக்கும் ஓய்வூதிய திட்டம்! மத்திய அரசின் NPS வாத்சல்யா விவரங்கள் இதோ…

குழந்தைகளின் நிதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மாதம் ஒரு முறை முதலீடு செய்யும் NPS வாத்சல்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

News Image

Author: Kanal Tamil Desk

Published: December 27, 2024

NPS எனும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தாங்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மூலமாகவோ, அல்லது தனிப்பட்ட முறையிலோ சேர முடியும். இப்படியான ஓய்வூதிய திட்டத்தில் குழந்தைகளும் பயன்பெறும்படி NPS வாத்சல்யா (NPS Vatsalya) திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 

இந்த திட்டத்தின் கீழ் ஒருவர் தனது குழந்தையின் பெயரில் எப்படி பணத்தை சேமிக்கலாம்,  எப்படி விண்ணப்பம் செய்யலாம்? என்பது பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். 

 NPS வாத்சல்யா (Vatsalya) :

NPS Vatsalya திட்டம் என்பது குழந்தைகளின் நீண்டகால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம், சிறு வயதிலேயே குழந்தைகள் மத்தியில் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த திட்டத்தில் ஒருவர் தனது குழந்தையின் பெயரில் முதலீடு செய்ய துவங்குகையில் அவருக்கு 18 வயது நிரம்பும் போது குழந்தையின் பெயரில் குறிப்பிட்ட அளவு பணம் சேமிப்பாக இருக்கும்.

அதே போல, இந்த திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்துவிட்டு, அவருடைய குழந்தைக்கு 18 வயது நிரம்பும் போது அத்திட்டத்தில் இருந்து அவர் வெளியேறிக்கொள்ளலாம். அப்போது அவர் எவ்வளவு முதலீடு செய்தாரோ அதற்கான தொகை மட்டும் விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும். 

எவ்வளவு முதலீடு செய்யலாம்? 

NPS வாத்சல்யா திட்டத்தின் கீழ் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் குழந்தையின் பெயரில் மாதம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. ஒருவரால் முடிந்த தொகையை முதலீடு செய்துகொள்ளலாம். 

எவ்வளவு லாபம்? 

மாதம் ஒருவர் தனது பிறந்த குழந்தையின் பெயரில் ரூ.1,000 முதலீடு செய்து இந்த திட்டத்தில் சேர துவங்கினால், அவர் மொத்தமாக, 18 ஆண்டுகளுக்கு 2,16,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள் (குழந்தையின் வயதை பொறுத்து). இந்தத் திட்டத்தின் கீழ், மொத்த வட்டியாக ரூ.6,32,718 வரை கிடைக்கும். இதனால், குழந்தை 18 வயது நிரம்பியபோது, மொத்தக் முதிர்வு தொகை ரூ.8,48,000ஆக இருக்கும். NPS Vatsalya திட்டத்தின் படி, 80% தொகை (ரூ.6,78,400) வழக்கமான ஓவ்ய்வூதிய திட்டத்தில் வருடாந்திர மறு முதலீடாக சேர்க்கப்பட்டுவிடும். அதே கணக்கில், குழந்தை அதாவது 18வயது நிரம்பிய நபர் NPS திட்டத்தில் முதலீட்டை மீண்டும் துவங்கலாம்.  

மீதமுள்ள 20% தொகையான ரூ.1,69,600 முழுமையாக 18 வயது நிரம்பியவுடன் திருப்பிச் செலுத்தப்படும்.மறு முதலீடு செய்யப்பட்ட தொகையானது குழந்தைக்கு ஓய்வூதியமாக 60 வயதை கடந்ததும் வழக்கமாக உள்ள ஓய்வூதிய திட்டம் மூலம் பலன் கிடைக்கும். 

திட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறலாமா? 

NPS வத்சல்யா திட்டத்தில் பாதியில் வெளியேறலாம், ஆனால் சில விதிமுறைகள் உள்ளன. இந்த திட்டத்தில் இருந்து நீங்கள் வெளியேற விரும்பினால் குறைந்தபட்ச காலம், திட்டத்தில் 10 ஆண்டுகள் முதலீடு செய்திருக்க வேண்டும். வெளியேறுவதற்கான காரணங்களாக மருத்துவ அவசரநிலை, குழந்தையின் கல்வி செலவுகள் போன்ற அத்தியாவசிய காரணங்களாக இருக்கவேண்டும். 

தொகை பிரிவு :

20% ஒருமுறை பெறலாம். (18 வயது நிரம்பியவுடன்)

80% ஓய்வூதியமாக மறு முதலீடு செய்யவேண்டும் (வழக்கமான NPS திட்டத்தின் கீழ்).

மேலும், ஆரம்ப காலத்தில் வெளியேறினால் கட்டணங்கள் மற்றும் அதற்கான வரி விதிக்கப்படும்.

திட்டத்தில் இருந்து வெளியேறுவதைப் பற்றிய முடிவுக்கு முன் நிதி ஆலோசகர்களிடம் ஆலோசனையை பெற வேண்டும்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நிபுணர்கள், இந்தத் திட்டத்தை குழந்தைகளின் எதிர்கால ஓய்வூதிய நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் சிறந்த முயற்சியாக பாராட்டுகின்றனர். அவர்கள், பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் பிற முக்கிய நிகழ்வுகளுக்கான நிதி தேவைகளை முன்னேற்பாடாக ஏற்பாடு செய்துகொள்ளலாம் என்று குறிப்பிடுகின்றனர்.

விண்ணப்பிப்பது எப்படி? (ஆன்லைன்) 

  1. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான eNPS இணையதளத்திற்கு செல்லவும்.
  2. அதில் "Register" என்பதை தேர்வு செய்து, "Individual Subscriber" என்ற பகுதியில் பதிவு செய்யவும்.
  3. நீங்கள் AADHAR, PAN, அல்லது மொபைல் OTP மூலம் KYC செய்யலாம்.
  4. குழந்தையின் பெயரில் கணக்கு உருவாக்கவும் மற்றும் தேவையான தகவல்களை நிரப்பவும்.
  5. முதலீட்டு திட்டம் (Active/Auto choice) மற்றும் பங்கீட்டு விகிதம் தேர்ந்தெடுக்கவும்.
  6. உங்கள் அறிக்கையை உறுதிப்படுத்தி, முதலீட்டு தொகையை செலுத்தவும்.

தேவையான முக்கிய ஆவணங்கள்:

  • குழந்தையின் ஆதார் அல்லது பிறப்பு சான்றிதழ் 
  • பெற்றோரின் PAN கார்டு மற்றும் ஆதார்.
  • மொபைல் நம்பர் 
  • குழந்தையின் புகைப்படம்.

ஆப்லைன் முறையில் விண்ணப்பிப்பது? 

அருகிலுள்ள NPS பாயின்ட் ஆஃப் பிரெசன்ஸ் (POP) (அஞ்சலகம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள்) செல்லவும்.

NPS பதிவு படிவத்தை (Form) பெறவும்.

தேவையான விவரங்களை நிரப்பி, உரிய ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்கவும்

Tags:Children InvestmentNPS VatsalyaNPS