‘கடனை வசூலிக்க கிராமத்தில் இரவு முகாம்கள் நடத்துங்கள்’ ம.பி கிராம வங்கிகளுக்கு உத்தரவு?
மத்திய பிரதேசத்தில் இயங்கி வரும் மத்தியாஞ்சல் கிராம வங்கி ஆலோசனை கூட்டத்தில் நீண்ட நாட்களாக திருப்பி செலுத்தப்படாமல் உள்ள கடன்களை வசூலிக்க இரவு முகாம்கள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: January 21, 2025
மத்திய பிரதேசம் சாகர் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள மத்தியாஞ்சல் கிராம வங்கியானது (Madhyanchal Gramin Bank) கிராம வங்கிகளில் அதிக கடன் பெற்று திரும்ப செலுத்தாதவர்களிடம் கடனை வசூலிக்க குறிப்பிட்ட கிராமங்களில் இரவு நேரம் முகாம் அமைத்து கடனை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ள அந்தந்த கிராம வங்கி கிளைகளுக்கு உத்தரவிட்டுள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன.
Advertisement
கடந்த ஜனவரி 17ஆம் தேதி சாகர் நகரில் மத்தியாஞ்சல் கிராம வங்கி தலைமை அலுலகத்தில் 2024- 2025ஆம் ஆண்டிற்கான NPA (Non Performing Asset) கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நீண்ட நாள் திரும்ப செலுத்தப்படாத கடன்களை வசூலிக்க நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், குழு உறுப்பினர்கள், கிராம வங்கிகள் மீதான தற்போதைய NPA அளவுகள் (நீண்ட நாட்களாக வசூல் செய்யப்படாத கடன்கள்) பற்றியும் அதனை குறைப்பதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றியும் அதிருப்தி தெரிவித்தனர்.
Advertisement
இதனை தொடர்ந்து NPA கடன்களை வசூலிக்க புதிய உத்தரவுகளை மத்தியாஞ்சல் கிராம வங்கி கிளைகளுக்கு, அந்த ஆலோசனை கூட்டம் முடிவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, NPA கடன் அளவு ரூ.20 லட்சத்திற்கு மேல் உள்ள மத்தியாஞ்சல் கிராம வங்கி கிளைகள், கடனை மீட்கும் பொருட்டு குறிப்பிட்ட கிராமப்புறங்களில் ஒவ்வொரு வாரமும் இரண்டு நாள் இரவு முகாம்கள் நடத்த வேண்டும். அதன் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிராந்திய அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்திடம் கூற வேண்டும். இதில் ஊழியர்களின் தேவைக்கேற்ப உதவிகள் செய்யப்படும்.
Advertisement
எனவே, வங்கி கிளையின் அதிகார வரம்பிற்குட்பட்ட கிராமப்புறங்களில் நடைபெறும் இரண்டு இரவு முகாம்களின் வாராந்திர அட்டவணையைத் தயாரித்து, ஜனவரி 20-க்குள் அதன் விவரங்களை மத்தியாஞ்சல் மண்டல அலுவலகத்தில் வழங்க வேண்டும் என மத்தியாஞ்சல் கிராம வங்கி ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தனியார் செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
NPA என்றால் என்ன?
NPA என்பது (Non Performing Asset) வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் ஒரு நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ வழங்கப்பட்ட கடன் தொகையில் இருந்து 90 நாட்களாக எந்த ஒரு வட்டியும், அசலும் வராமல் இருக்கும் கடன் தொகையானது NPA எனப்படுகிறது.
இது 12 மாதங்களுக்கு உள்ளே இருந்தால் சந்தேக நிலை என்றும், 12 மாதங்களுக்கு மேலே சென்றால் ஏமாற்றக்கூடிய நிலை என்றும், நீண்ட வருடங்களாக இருந்து அதனை வசூல் செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்றால் அது வங்கியின் நஷ்ட கணக்கிலும் சேர்க்கப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments yet.
