பேச்சுவார்த்தையில் பெரிதாக ஒன்றுமில்லை., போராட்டத்திற்கு தயாராகுங்கள்! AIBEA அறிவிப்பு!
2 நாள் வேலைநிறுத்தம் தொடர்பாக வங்கிகள் கூட்டமைப்பு, மத்திய நிதியமைச்சகம் நடத்திய பேச்சுவார்தையில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என AIBEA தெரிவித்துள்ளது.

Author: M Manikandan
Published: March 18, 2025
வாரத்தில் 5 நாட்கள் வேலை, வங்கி காலிப்பணியிடங்களில் போதிய ஆட்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி UFBU சங்கத்தின் தலைமையில் AIBOC, AIBEA, BEFI, INBOC, AIBOA, NCBE, INBEF, NOBW மற்றும் NOBO வங்கி சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதில் மிக முக்கிய போராட்ட முன்னெடுப்பாக 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தமானது வரும் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு முன்னதாக கருப்பு பேட்ஜ் அணிவது, வங்கி தலைமை அலுவலகங்கள் முன்பு போராட்டம், டெல்லி நாடாளுமன்ற வளாகம் முன்பு தர்ணா என பல்வேறு போராட்டங்களை வங்கி ஊழியர்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மார்ச் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் 2 நாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றால் நிதித்துறையில் பல்வேறு சிக்கல்கள் எழும் என கூறப்படுகிறது. ஏனென்றால் மார்ச் 31ஆம் தேதியுடன் நிதியாண்டு இறுதி கணக்கு முடிக்கப்படும். இதனால் மாத இறுதியில் வேலைநிறுத்தம் என்பது பணிச்சுமையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் வேலைநிறுத்த போராட்டம் குறித்து மத்திய நிதியமைச்சகம் ஆலோசனை நடத்தியது. இன்று டெல்லியில் உள்ள மத்திய தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய வங்கி கூட்டமைப்பு (IBA), DFS (நிதியமைச்சகம்) மற்றும் வங்கி நிர்வாக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து AIBEA பொதுச்செயலாளர் C.H.வெங்கடாச்சலம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “ இன்று (மார்ச் 18) CLC அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் IBA, DFS மற்றும் வங்கி நிர்வாகங்கள் கலந்து கொண்டனர்.
வங்கி ஊழியர்கள் பிரச்சினைகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக ஆட்சேர்ப்புகள், 5 நாள் வங்கிச் சேவை, ஒருதலைப்பட்சமான PLI போன்ற சிக்கல்களில் சாதகமான முடிவுகள் எதுவும் இன்று எட்டப்படவில்லை. இந்த ஆலோசனை கூட்டம் வரும் மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. UFBU தங்கள் வேலைநிறுத்த போராட்ட நடவடிக்கைகளை தொடரவும். என பதிவிட்டு இருந்தார்.
No comments yet.