Advertisement
LIC-ன் கூடுதல் பங்குகளை விற்க அரசு புதிய திட்டம்! முழு விவரம் இதோ...
நடப்பு நிதியாண்டில் (FY26) எல்ஐசியின் 2-3% பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Author: Tamil Desk
Published: April 7, 2025
Advertisement
இந்திய அரசு, தனது மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் (LIC) உள்ள தனது பங்குகளில் 2 முதல் 3% விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இது 2025-26 நிதியாண்டில் (FY26) நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அரசு LIC-யில் 96.5% பங்குகளை அரசு தன்வசம் வைத்துள்ளது. இது 2022-ம் ஆண்டு LIC-யின் முதல் பங்கு வெளியீடு (IPO) மூலம் 3.5% பங்குகளை விற்ற பிறகு உள்ள நிலை ஆகும்.
இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI (Securities and Exchange Board of India) விதிகளின்படி, பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10% பங்குகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். LIC போன்ற புதிதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களுக்கு இதை அடைய மூன்று ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. LIC-க்கு இந்த இலக்கை 2027 மே 16-க்குள் அடைய வேண்டும். அதனால், அரசு தனது பங்குகளை படிப்படியாக விற்று, இந்த விதியை பூர்த்தி செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது.
Advertisement
எதற்காக?
அரசு இந்த விற்பனை மூலம் பெரிய தொகையை திரட்ட முயல்கிறது. இது பொருளாதார தேவைகளுக்கும், பொதுத்துறை நிறுவனங்களில் பங்கு விற்பனை இலக்குகளை அடையவும் உதவும்.
இந்த விற்பனை சந்தை நிலைமைகளைப் பொறுத்து நடைபெறும். சந்தை சாதகமாக இருந்தால், ஒரே முறையில் விற்காமல், சிறு சிறு பகுதிகளாக (tranches) விற்கப்படலாம். இதனால் பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும்.
சந்தை நிலைமைகள் சரியில்லை என்றால், அரசு SEBI-யிடம் கூடுதல் அவகாசம் கேட்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பங்கு விற்பனை "ஆஃபர் ஃபார்சல்" (OFS) முறையில் நடைபெறலாம். இதில் சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் LIC பாலிசிதாரர்களுக்கும் பங்கு வழங்கப்படலாம் என்று DIPAM (Department of Investment and Public Asset Management) செயலாளர் அருணிஷ் சாவ்லா கூறியுள்ளார். "LIC ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும்" என்பது அவர்களின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.
2022-ல் LIC தனது 3.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் தோராயமாக ரூ.21,000 கோடி நிதி திரட்டப்பட்டது. தற்போது 2 முதல் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்வது மூலம் ரூ.9,500 கோடி முதல் ரூ.14,500 கோடி வரை ஈட்டக்கூடும் என்று தனியார் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
No comments yet.