- தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
- அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
- வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
- ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
அனைத்து வகையான தங்கத்திற்கும் இனி ஹால்மார்க் கட்டாயம்? வெளியான புதிய தகவல்!
தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்து தங்க பொருட்களுக்கும் ஹால்மார்க் உத்திரவாதம் என்பது விரைவில் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Author: Kanal Tamil Desk
Published: December 2, 2024
இந்தியாவில் தற்போது தங்க ஆபரணங்கள் மற்றும் தங்கம் கொண்டு செய்யப்படும் சிறு கைவினை பொருட்களுக்கு ஹால்மார்க் முத்திரை பதிப்பது வருகின்ற 2025 ஜனவரி முதல் கட்டாயமாக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கம் ஆபரணங்கள், தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்கள் என அனைத்து வகை தங்கத்துக்கும் ஹால்மார்க் கட்டாயமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஹால்மார்க் :
ஹால்மார்க் என்பது தங்க நகைகள் மற்றும் தங்கம் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்கள் அனைத்து வகை தங்கத்திற்கும், அவை செய்து முடித்து பிறகு அது தங்கத்தால் தான் செய்யப்பட்டதா? அதனுடைய தர அளவு எவ்வளவு என்பதை ஆராய்ந்து அதனை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யும் நடைமுறையே, ஹால்மார்க் முத்திரை ஆகும்.
தங்கம் என்பது மென்மையான உலோகம் என்பதால், அதை அணிகலனாக உருவாக்க மற்ற உலோகங்களுடன் கலந்து உருவாக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால் தங்கத்தில் அதிகளவு மாற்று உலோகம் கலக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. அதைத் தொழில்நுட்ப ரீதியாக சோதனை செய்யாமல் கண்டறிவது கடினம். எனவே, இந்த குறைபாட்டை பயன்படுத்தி ஒருசில வியாபாரிகள், வாடிக்கையாளர்களை ஏமாற்றி சுத்த தங்க நகை எனக் கூறி மற்ற உலோகம் அதிகம் கலந்த தங்க நகையை விற்பனை செய்துவிடும் அபாயம் உள்ளது.
இந்த குறைபாட்டை தவிர்க்கவும், தங்கத்திற்கு உரிய தரக் குறியீடுகளை உருவாக்கவும், இந்திய தரநிலைகள் பணியகம் (BIS - Bureau of Indian Standards) கடந்த 2000-ம் ஆண்டு முதல் தங்க நகை தரத்தை உறுதி செய்ய ஹால்மார்க் உத்தரவாதத்தை செயல்படுத்த தொடங்கியது.
அனைத்து தங்கத்திற்கும் ஹால்மார்க் உத்திரவாதம் :
தங்க நகை வியாபாரத்தில் எந்த அளவுக்கு தங்கத்தின் தரம் இருக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகவும், தங்க தரக் கட்டுப்பாட்டை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அரசு விரும்புகிறது. அதாவது, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தையும் ஹால்மார்க் உத்திரவாத சட்டத்தின் கீழ் கொண்டுவருவதால், தரத்தின் மீதான மதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், தங்கத்தில் மற்ற உலோகங்கள் அதிகம் கலக்கப்படுவதையும் குறைக்கலாம். இதனால், அனைத்து வகை தங்கங்களின் பதிவுகளையும் அரசு கண்காணிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.
சிக்கல்களும் தீர்வுகளும் :
தற்போது இந்தியாவின் அனைத்து நகர பகுதிகளிலும் ஹால்மார்க் தர நிர்ணய மையங்கள் (Assaying and Hallmarking Centres - AHC) இல்லை. தற்போதைய நிலவரப்படி மொத்தமாக 1622 மையங்கள் மட்டுமே உள்ளது. நாளொன்றுக்கு சுமார் 4 லட்சம் தங்கப் பொருட்கள் ஹால்மார்க் செய்யப்படுகின்றன. ஒரு தங்க பொருளுக்கு ஹால்மார்க் தர சான்று பெற ரூ.52 வரை செலவாகிறது. இந்தியா முழுக்க தங்க நகை தரத்தை அறிய அதிக ஹால்மார்க் மையங்கள் தேவைப்படுகின்றன. எனவே, அதற்கான முயற்சிகளையும் அரசு எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
நன்மைகள் :
ஹால்மார்க் கட்டாயமாக்கப்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். ஏனென்றால், ஒரு ஹால்மார்க் உத்திரவாதம் மூலம் தங்கத்தின் சுத்தத்தையும், அந்த தங்க பொருளை சோதித்த மையத்தின் விவரங்களையும், ஹால்மார்க்கிங் பதிவு எண் மற்றும் தயாரிப்பாளர் பற்றிய தகவல்களையும் BIS CARE ஆப் மூலம் நாம் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். இது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தங்கத்தின் தரத்தை உறுதிசெய்து அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்க செய்கிறது.