தலைப்பு செய்திகள்
  • தமிழ் நாடு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு; கோரிக்கைகள் இன்னும் நிலுவையில்
  • அரசின் கொள்கைகளால் நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள்
  • வங்கிகள் இணைப்பு மற்றும் கிளைகள் மூடல்: தனியார்மய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பொதுத்துறை வங்கிகள்
  • ஊடக சுதந்திரத்தைக் காக்க ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
Kanal Logo

Friday, Apr 18, 2025 | India

Home / இந்தியா

"மார்பை தொடுவது பாலியல் குற்றமல்ல" அலகாபாத் உயர்நிதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்.!

பெண்ணின் மார்பகத்தை பிடித்தாலோ, ஆடையை கிழித்தாலோ 'ரேப்பாக' கருத முடியாது என அலகாபாத் ஐகோர்ட் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

News Image

Author: Gowtham

Published: March 26, 2025

பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது, நாடாவை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமை முயற்சியின் கீழ் வராது என்ற அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்குத் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தத் தீர்ப்பு மனிதாபிமானமற்ற அணுகுமுறையைக் காட்டுவதாக குறிப்பிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், “இந்தத் தீர்ப்பை எழுதியவர் முற்றிலும் உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது” எனக் காட்டமாக விமர்சித்தனர். 

அலகாபாத் உயர்நீதிமன்றம் சமீபத்தில் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில், ஒரு சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது, ஆடைகளை இழுப்பது அல்லது பைஜாமாவை கிழிப்பது போன்ற செயல்கள் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) அல்லது அதற்கான முயற்சியாகக் கருதப்படாது என்று கூறப்பட்டது.

இந்தத் தீர்ப்பு, இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO Act) ஆகியவற்றின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது. அலகாபாத் நீதிமன்ற நீதிபதி ராம்மனோகர் நாராயண் மிஸ்ரா, இத்தகைய செயல்கள் “மோசமான பாலியல் குற்றச்சாட்டு” என்ற பிரிவின் கீழ் வரலாம் என்றும், ஆனால் அவை பாலியல் வன்கொடுமை அல்லது பலாத்கார முயற்சியாகக் கருதப்படாது என்றும் தீர்ப்பளித்தார்.

இதன் விளைவாக, குற்றம்சாட்டப்பட்ட இருவர் விடுவிக்கப்பட்டனர். இந்தத் தீர்ப்பு பொதுமக்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. சமூக தளங்களிலும் இது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

உ.பி, மத்திய அரசுகள் உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம்  இன்று (மார்ச் 26) அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் ஏ.ஜி. மாஷிஹ் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை குற்றத்தின் தீவிரத்தை உணராமல் நீதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு நீதிபதிக்கு எதிராக இப்படி சொல்வது வேதனை தருகிறது.

மேலும், இந்தத் தீர்ப்பு சட்டக் கோட்பாடுகளுக்கு எதிரானது மற்றும் மனிதாபிமானமற்ற அணுகுமுறையை பிரதிபலிப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியதோடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதே சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், இத்தகைய தீர்ப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் வேதனையை ஏற்படுத்துவதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரத்தில் விரிவான பதிலளிக்க உத்தரவிடப்பட்டது.

 

Tags:Sexual harassmentAllahabadAllahabad High CourtSupreme Court