குறைந்த முதலீடு அதிக லாபம் : பேராசையால் ரூ.52 லட்சத்தை இழந்த தொழிலதிபர்! சிக்கிய சைபர் குற்றவாளி!
தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.52 லட்சம் பணத்தை சைபர் மோசடி கும்பல் திருடியுள்ளது. இந்த வழக்கில் கேரளாவை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Author: Kanal Tamil Desk
Published: December 9, 2024
ஆன்லைன் பணப்பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அவ்வாறு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் போலி இணையத்தளம் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்த ரூ.52 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் அண்மையில் அரங்கேறியுள்ளது.
நடந்தது என்ன?
தூத்துக்குடி KTC நகர் பகுதியை சோ்ந்த நபர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என மெசேஜ் வந்திருக்கிறது. இதனை பார்த்த அந்த நபர் இது என்னவென்று அதற்கான விவரத்தை தெரிந்துகொள்ள அவரது மொபைலுக்கு வந்த மெசேஜை க்ளிக் செய்து பார்த்திருக்கிறார்.
மெசேஜை ஓபன் செய்து பார்த்தபிறகு, இதில் நாம் முதலீடு செய்யலாம் என திட்டமிட்டு அதில் குறிப்பிடப்பட்டிருந்தாக கூறப்படும் தொகையை முதலீடு செய்து ரூ.4.4 லட்சம் பணத்தை லாபமாக முதலில் பெற்றுள்ளார். ஆனால், இது ஒரு சூழ்ச்சி வலை என அப்போது அவருக்கு தெரியவில்லை. அந்த நபரும் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகத்தில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
மர்ம நபரின் ஸ்கெட்ச் :
பிறகு அந்த நபருக்கு சில மர்ம நபர்கள் போன் செய்து இன்னும் அதிக பணத்தை முதலீடு செய்யுங்கள் இதை விட லாபம் அதிகமாகவே கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மர்ம நபர்கள் சொல்லிய ஆசை வார்த்தைகளையும் நம்பி அந்த நபர் முதலீடு செய்துள்ளார்.
பிறகு அந்த மர்ம நபர்கள் www.irqql.com என்ற இணையதள லிங்கை அனுப்பி அதற்குள் (FHT) என்ற செயலி இருக்கும் அதனை பதிவிறக்கம் செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். அந்த நபரும் சொன்னதை போல செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியின் மூலம் ரூ.52.11 லட்சம் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
அதிர்ச்சி :
முதல் முறையே அந்த நபருக்கு லட்சக்கணக்கில் லாபம் கிடைத்தது இந்த முறை நிறைய அளவு பணம் கிடைக்கும் என ஆசையுடன் காத்திருந்த அந்த நபருக்கு கடைசியில் முதலீடு செய்த மொத்த பணமும் திரும்ப வரவில்லை என்ற அதிர்ச்சி செய்தி தான் கிடைத்துள்ளது. இதனையடுத்து, அந்த நபர் தேசிய சைபர் குற்றப்பதிவு இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
போலீசார் தீவிர விசாரணை
அந்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பரட் ஜான் உத்தரவின் பேரில், சைபர் குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி (பொ) எடிசன் மேற்பார்வையில் ஆய்வாளர் சாந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிக்கிய திருடன் :
இந்த தீவிரமான விசாரணையில் அஜ்மல் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தவுடன் உடனடியாக கேரளா சென்ற போலீசார், அஜ்மலை கைது செய்தனர். அது மட்டுமின்றி இந்த மோசடி தொடர்பான இணையதளத்தையும் முடக்கினர். மேலும், இவர் மட்டும் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டாரா, அஜ்மலுக்கு பின்னாடி வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதற்கான விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போலீசார் வேண்டுகோள் :
இந்த சம்பவத்தை ஒரு உதாரணமாக எடுத்து கொண்டு பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இதுபோன்று பகுதி நேர வேலை, ஷேர் மார்க்கெட் டிரேடிங், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் விளம்பரங்களை எந்த காரணத்துக்காகவும் கிளிக் செய்யவோ முதலீடு செய்யவோ வேண்டாம் என எஸ்பி ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
No comments yet.