கோவில்களில் சினிமா பாடல்கள் ஒலிக்க தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
கோயில் விழாக்களில் நடைபெறும் இசைக் கச்சேரிகளில் பக்தி பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும் என்றும் சினிமா பாடல்களை ஒலிபரப்ப அனுமதிக்கக் கூடாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Author: Santhosh Raj KM
Published: March 6, 2025
கோவில் திருவிழாக்களில் சினிமா பாடல்கள் பாடப்பட்டதை கண்டித்து போடப்பட்ட வழக்கு இன்று நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் கோவில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள், சினிமா பாடல்களை ஒலிபரப்ப கூடாது, பக்தி பாடல்கள் மட்டுமே இடம் பெறவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும்போது இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும், அதில் சினிமா பாடல்களும் ஒலிபரப்பப்படுவதும் வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி திருமலையராயன்பட்டினத்தில் உள்ள பெருமாள் கோவில் விழாவில் சினிமா பாடல்கள் ஒலிபரப்பப்பட்டதை கண்டித்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
Advertisement
மனுதாரர் தரப்பு :
புதுச்சேரி திருமலைராயன்பட்டினத்தில் உள்ள வீழி வரதராஜப் பெருமாள் கோயில் திருவிழாவின்போது கோயில் வளாகத்துக்குள் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. அதில் பக்திப் பாடல்களைத் தவிர்த்து பக்திக்கு அப்பாற்பட்ட சினிமா பாடல்கள் தான் அதிகமாக ஒலிபரப்பப்பட்டது. கோயிலுக்கு அறங்காவலர்களை முறையாக நியமித்து இருந்தால் இதுபோன்ற நிகழ்வுகள் கோயில் வளாகத்துக்குள் நடைபெற்றிருக்காது.
Advertisement
எனவே கோயிலை நிர்வகிக்கும் நிர்வாகிகள் அல்லது பக்தர்கள் ஏற்பாடு செய்யும் கோயில் திருவிழா இசைக் கச்சேரிகளின்போது சினிமா பாடல்களை ஒலிபரப்பக்கூடாது என்றும், ஆபாசப் பாடல்களுக்கு நடனமாடக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும். அதுபோல புதுச்சேரி வீழி வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு அறங்காவலர்களையும் உடனடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும்," என மனுவில் சொல்லியிருந்தார்.
நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி தீர்ப்பு :
கோயில் திருவிழா நேரங்களில் இசைக் கச்சேரிகளை நடத்துவதாக இருந்தால் கண்டிப்பாக பக்தி பாடல்களை மட்டுமே ஒலிபரப்ப வேண்டும். சினிமா பாடல்களை ஒலிபரப்பகூடாது. அதேபோல, ஆபாச நடனங்களையும் கோயில்களில் அனுமதிக்கக் கூடாது. அறங்காவலர்களை நியமிக்காமல் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை நீண்ட நாட்களுக்கு தனது கையிலேயே வைத்திருக்க முடியாது.
எனவே இந்த கோயிலுக்கு அறங்காவலர்களை நியமிக்கவும் அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சேரிகளை நடத்துவதாக இருந்தால் கண்டிப்பாக பக்தி பாடல்களை மட்டுமே பாட வேண்டும். சினிமா பாடல்களை பாடக்கூடாது.
அதேபோல ஆபாச நடனங்களையும் கோயில்களில் அனுமதிக்கக் கூடாது. எனவே இந்த கோயிலுக்கு அறங்காவலர்களை உடனடியாக நியமிக்கவும் அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்," என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments yet.
