சிவாஜி கணேசனின் 'அன்னை இல்லம்' ஜப்தி உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

Author: Santhosh Raj KM
Published: April 22, 2025
ஜகஜால கில்லாடி என்ற பெயரில் படத்தயாரிப்பதற்காக நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த், தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார் வட்டியுடன் சேர்த்து 9 கோடி ரூபாய் கடன் தொகையை திருப்பித் தரக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது அந்த வழக்கில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 21-ல் சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் புரொடக்சன்ஸ் என்கிற நிறுவனத்தில் பங்குதாரர்களாகளாக உள்ளனர். இந்த நிறுவனம் சார்பில் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோரின் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்கிற படத்தைத் தயாரிக்க கடன் வழங்கக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகியுள்ளனர்.
இந்தப் பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடன் தொகையை திருப்பி கொடுக்கப்படவில்லை.
இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்தை விசாரித்த மத்தியஸ்தர் நீதிபதி ரவீந்திரன், கடன் தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி உத்தரவிட்டார்.
உரிமைகளைப் பெற்று அவற்றை விற்று கடன் தொகையை ஈடு செய்யவும், மீதத்தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவின்படி படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து, பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு, கடந்த ஏப்ரல் 3-ம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை நீதிபதி அப்துல் குத்தூஸ், விசாரித்தார்
நீதிபதியின் கேள்வி
"ராம்குமார் உங்களுடைய சகோதரர் தானே? ஒன்றாக தானே வாழ்ந்து வருகிறீர்கள்? அந்த கடனை தற்போது நீங்கள் செலுத்திவிட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே?" என கேள்வி எழுப்பினார்
பிரபு தரப்பு வழக்கறிஞர்
ராம்குமார் பெற்ற கடனுக்காக மூன்றாம் நபரான எனக்கு சொந்தமான ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனது வாழ்நாளில் இதுவரை நான் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை. எனவே, அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இது போன்று அவருக்கு உதவ முடியாது. நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார்" என்று கூறினார்.
ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஏப்ரல் 7 ஆம் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சிவாஜி வீட்டின் மீது உரிமை, பங்கு இல்லை எனவும், எதிர்காலத்திலும் எந்த உரிமையும் கோரமாட்டேன் எனவும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், ஜப்தி உத்தரவை நீக்க கோரிய நடிகர் பிரபு மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
நீதிபதியின் தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதத்தையும் கேட்ட நிதிபதி இன்று சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். பிரபுதான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர் எனவும், வில்லங்க பதிவில் நீதிமன்றம் ஜப்தி உத்தரவை நீக்கவும் பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments yet.