படகோட்டி ரூ.30 கோடி சம்பாதித்த நபர்! "ரூ.12.8 கோடி கொடுங்க"..வரி நோட்டிஸ் அனுப்பிய வருமான வரித்துறை!
மகா கும்பமேளாவில் ஒருவர் படகோட்டியே ரூ.30 கோடி சம்பாதித்ததாக அவருக்கு ரூ.12.8 கோடி வரி விதிப்பு

Author: Bala Murugan K
Published: March 15, 2025
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வில், பக்தர்களை படகில் ஏற்றி, இளம் ஒரு படகோட்டி ரூ.30 கோடி வருமானம் ஈட்டியதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமையுடன் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், அந்த படகோட்டிக்கு வருமான வரித்துறை ரூ.12.8 கோடி வரி விதித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.
படகோட்டிக்கு வருமான வரி நோட்டீஸ் – காரணம் என்ன?
வருமான வரித்துறை 1961 வருமான வரி சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 68-ன் கீழ் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. பிரிவு 4 – எந்த முறையிலான வருமானமாக இருந்தாலும், அதற்கு வரி செலுத்த வேண்டிய கட்டுப்பாடு உள்ளது.
பிரிவு 68 – வருமானத்திற்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாதால், அது "குறிப்பிடப்படாத வருமானம்" (Unexplained Income) என கருதப்படும். இதனால், கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும். முதலமைச்சரின் பேச்சில் இருந்து வருமான வரித்துறைக்கு இது குறித்த தகவல் சென்றதாக கருதப்படுகிறது.
படகோட்டியின் வருமானம் எப்படி வந்தது?
மகா கும்பமேளா இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாகும். கோடிக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று, புண்ய ஸ்நானம் செய்வதை முக்கிய கடமையாக கருதுகிறார்கள். எனவே, இந்த விழாவின் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நதியில் படகுகளில் சென்று ஸ்நானம் செய்வது பெரிய வர்த்தக வாய்ப்பாக மாறியது.
பக்கதர்கள் கூட்டம் அலைமோதிய காரணத்தால் படகோட்டிகள், ஒவ்வொரு பயணத்திற்கும் உயர்ந்த கட்டணங்கள் வசூலித்துள்ளனர். இதன் மூலம், குறிப்பிட்ட படகோட்டி மிகப்பெரிய லாபம் ஈட்டியிருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனால், ரூ.30 கோடி வருமானம் எப்படி வந்தது? என்பது மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது. இதனால், அந்த வருமானத்தின் ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு அவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் சர்ச்சைகள்
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது. சிலர், "ஒரு சாதாரண படகோட்டி எப்படி 30 கோடி சம்பாதிக்க முடியும்?" என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலர், "முதலமைச்சரே சொன்ன தகவலால், ஒரு சாதாரண மனிதர் வருமான வரித்துறையின் கண்களில் சிக்கிவிட்டாரா?" என்று கேள்வி எழுப்புகின்றனர்.
இன்னும் சிலர், "கும்பமேளா போன்ற நிகழ்வுகளில் உள்ளபடி பல பணப்புழக்கங்கள் வெளியில் வராமல் இருக்கின்றன. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டும்தான்" என கூறுகிறார்கள். படகோட்டியின் நிலைமை என்ன? தற்போது, அந்த படகோட்டி தன் வருமானத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வருமானத்திற்கு உரிய ஆதாரங்கள் இருந்தால், அவர் குற்றமற்றவர் என்பதும், வரியை சரியாக செலுத்தியிருக்கிறார் என்பதும் நிரூபிக்கலாம். ஆதாரங்கள் இல்லையென்றால், அதிக அபராதம் மற்றும் கூடுதல் வரி விதிக்கப்படும். வருமான வரித்துறை எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது வருகிற நாட்களில் தெரிய வரும்.
மகா கும்பமேளா – வருமான கணக்கீட்டில் மீறலா?
மேலும், இந்த விவகாரம் கும்பமேளா போன்ற மாபெரும் நிகழ்வுகளில் பணப்புழக்கம் மற்றும் வரி கணக்கீட்டு முறைகள் எவ்வாறு உள்ளன என்பதை நம்மை யோசிக்க வைக்கிறது. படகோட்டிகள், கடைகளின் உரிமையாளர்கள், தற்காலிக வசதிகள் வழங்குபவர்கள் போன்றோர் இத்தகைய திரளான நிகழ்வுகளில் மூலதனமில்லாமல் பெரிய லாபம் ஈட்டும் வாய்ப்பு பெறுகிறார்கள். ஆனால், அவர்கள் பலர் வரி கணக்கில் இல்லாமல் பணப்புழக்கம் செய்வதால், இது நேர்மையான வரி செலுத்துவோருக்கு ஏமாற்றமாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் வரும் பணப்புழக்கத்தை கண்காணிப்பது முக்கியம் என்பதும் இந்த விவகாரம் மூலம் வெளிப்படுகிறது.
No comments yet.